கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுக்கள் ஜூலைக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Thursday, March 21st, 2024

இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்ற என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்ப்பதோடு, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி, நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: