ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் இடையே விசேட கலந்துரையாடல்!

Friday, September 3rd, 2021

மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பில், அமைச்சர் இதுகுறித்து விளக்கமளித்ததாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில், இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் இது தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

உலக சுகாதார தாபனம் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளையும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உதவிகளையும் அவர் பாராட்டினார்.

அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட, மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் இதன்போது விளக்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையுடனான அடுத்த 5 வருடங்களுக்கான ஒத்துழைப்புடன், இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு 2023 முதல் 2027 இன் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே தயாராகி வரும் செயன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

இது 2030 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பின் இறுதி சுழற்சியாகும்.

அமைதி மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளின் அனைத்து அம்சங்களிலும் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் குழுவின் ஒத்துழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: