எரிபொருள் நிலையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு – ரோந்து பணிகள் ஊடாகவும் கண்காணிப்பு என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Wednesday, May 25th, 2022

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் –

சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திட்டமிட்ட வகையில் பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அநாவசிய குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே இவர்கள் செயற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இந்த இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் உடனடியாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் பவுஸர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அநாவசிய குழப்ப நிலைகளினால் வீதிகள் மூடப்பட்டு பெரும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறு வீதிகள் மூடப்படுவதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உட்பட வீதிகளில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.  எனவே, இவ்வாறான போராட்டங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தகவல் அறியும் சட்ட மூலம் நாட்டில் புதியதொரு கலாசாரத்தை உருவாகும் - பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதார...
மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் - மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஈ.பி.டி...
ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் புதிய நடைமுறையே அமுலிலிருக்கம் - அரசாங்க அதிபர் மக...