எமது எதிர்கால சந்ததியினர் சமூகத்தை தன்னம்பிக்கையுடன் அணுகவேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா!
Monday, November 28th, 2016எமது இளைய சந்ததியினர் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் தன்னம்பிகையுடனும் எமது சமுதாயத்தை அணுக வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் அமைப்பாளரும் வெண்மயில் அமைப்பின் தலைவருமான மாட்டின் ஜெயா தெரிவித்தார்.
மட்டு. நகர் சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அவளா நூல் வெளியீட்டு நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் – வெட்டி ஒட்டி விருட்சம்தரா வீரியவித்தாய் மண்ணில் வீழ்ந்து நம்பிக்கை வேர்பரப்பி இலக்கியத் தோட்டத்தில் பூத்திருக்கும் அவளா எனும் குறுநாவல் தொடர்பாக அறிஞர்களும் சான்றோர்களும் முன்னரே பேசியுள்ள போதிலும் தமிழர் வரலாற்றில் ஒன்றிப் போயுள்ள இலக்கியப் படைப்புக்கள் காலத்தினால் அழியாதது மாத்திரமல்ல ஒரு இனத்தின் அடையாளமாகவும் வரலாறாகவும் வாழ்வியலாகவும் அந்த இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது என்றால் மிகையாது. தமிழருடைய இலக்கியங்கள் சங்ககாலம் தொடக்கம் சங்கமருவிய காலம் முதல் மன்னர் காலங்களிலும் போர் இலக்கியங்களாகவும் காதல் இலக்கியங்களாகவும் வெளிப்பட்டுக் கிடக்கின்றன.
இன்றைய நவீன உலக ஒழுங்கிலே இலக்கியப் படைப்புக்கள் மிகவும் அரிதாகவே வெளிவருகின்றது. இந்த அவளா நூலாசிரியரின் தன்னம்பிக்கை ஏனைய எழுத்தாளர்களுக்கும் வருவதோடு எமது இளம் சந்ததியினர் அறிவுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் விஞ்ஞானத்தில் மட்டுமன்றி மெய்ஞானத்திலும் சிறந்து விளங்குவதுடன் எமது சமுதாயத்தை உணர்ச்சிபூர்வமாக அணுகாது அதன் உள்கிடக்கைகளை உணர்வுக்கண்கொண்டு பார்க்க வேண்டிய அதேவேளை அறிவுபூர்வமாகவும் எமது சமுதாயத்தின் செயற்பாட்டை முன்னெடுக்க எமது மாணவர்களும் இளம் சமுதாயத்தினரும் முன்வர வேண்டும்.
ஆகவே எமது இளம் சமுதாயத்தினரே எண்ணிமுடிதல் வேண்டும். நல்லதேல் எண்ண வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்தநல் அறிவு வேண்டுமெனக்கூறி அமைகிறேன்.
Related posts:
|
|