எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, November 19th, 2020

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 6ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களே இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை தொடர்பிலும்  மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 09 ஆம் திகதி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் நேற்று எடுக்கப்பட்ட நிலையிலேயே அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: