எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே நோக்கம் – அடுத்த ஆண்ட முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, September 4th, 2023

எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

நாம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு நின்றால் உலகம் நம்மைக் கடந்து செல்லும்” என்ற பாடலை மேற்கோள் காட்டி கல்வி அமைச்சர் உரையாற்றினார். அதை மனதில் வைத்துத் தான் இன்று இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைத்தொழில்துறை யுகத்தின் அணுகுமுறைகளுடன் நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றினோம். அந்தf; கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டோம். அதன் முடிவுகளை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாறினோம். ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றும் திட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளேன். அதனை எமது அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

ஒரு நாடு என்ற வகையில் மீண்டும் படுகுழியில் விழாமல் எப்படி முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளைத் தொடர்வதா அல்லது புதிதாகச் சிந்தித்துப் புதிய பாதையில் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பழைய முறையின் கீழ் சென்றால், ஒரே இடத்தில் சுற்றுவதற்குக் கூட நாடொன்று எஞ்சாது. ஏனென்றால் இன்று நாம் இருக்கும் இடத்தில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கக் காத்திருக்கும் தலைமுறைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதையும் கூற வேண்டும். எனவே தொழில்நுட்பத்துடன் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்ப வளர்ச்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை.

நாங்கள் பாடசாலையில் கற்கும் போது கிராமங்களில் ஒரு தொலைபேசி கூட இருக்கவில்லை. ஆனால் இன்று அனைவரிடமும் கைபேசி உள்ளது. சிலரிடம் இரண்டு கைபேசிகள் இருக்கின்றன. அதுதான் நிகழ்ந்துள்ள மாற்றமாகும்.

இந்த மாற்றத்துடன் நாம் முன்னேறும்போது, நவீன தொழில்நுட்பத்தை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக பல பாரிய பணிகளை செய்து வருகிறோம். மேலும், கல்வி அமைச்சு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறைகளை முடிவு செய்ய வேண்டும். பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு,ஜெனொம் விஞ்ஞானம் என இவை அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்..

அன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் இருக்கவில்லை. இலங்கைக்கு இணையத்தைப் பெற 1993 ஆம் ஆண்டில் நான் கையெழுத்திட்டேன். அதுவரை இந்த வசதிகள் எங்களிடம் இல்லை. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாம் மிகக் குறுகிய காலத்தில் உலகத்துடன் இணைந்துள்ளோம்.

மேலும், போட்டித்தன்மையான பொருளாதாரத்தில், எல்லைகளைப் பற்றி கவலைப்படாத நிதி முறைமையே உள்ளது. இது நல்லதோ கெட்டதோ அதை மாற்ற முடியாது. இந்த எல்லையில் இருந்து நாம் செயற்பட வேண்டும். உலகிற்குத் தேவையான பணம் இறுதியாக சந்தையில் இருந்து பெறப்படுகிறது. வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை வங்கிகளிடமிருந்து பெறுகின்றன. நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை பங்குச் சந்தையில் இருந்து பெறுகின்றன. அதற்கேற்ப பணம் பயன்படுத்தப்படுகிறது.

இங்கே மிக முக்கியமான விடயம் பணம். தனியார் துறையைப் போலவே, அரசாங்கமும் பணச் சந்தையைத் தான் தேர்ந்தெடுக்கிறது. திறைசேரி முறிகளை பெறுகிறோம். இன்று இந்த முறையைப் பற்றி உங்களை அறிவூட்ட அதன் ஒரு பகுதியைத்தான் இன்று ஆரம்பித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: