உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023

 

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டிடத் தொகுதியான லக்சியனே மாளிகையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காது என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்றும், தற்போது வங்கி வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியையும் அது பாதிக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டின் மொத்த அரச கடன் 83,700 மில்லியன் டொலர்களாகும் என்றும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128.3 விகிதம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கடனை மறுசீரமைக்காமல் பேணினால், 2035 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 வீதத்திற்கும் அதிகமாக அரச கடன் இருக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நாட்டின் கடனை மறுசீரமைக்க ஏற்கனவே உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு, கடன் மறுசீரமைப்பு அவசியமானது என்றும் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

பொதுமக்களின் வங்கி வைப்புகளை பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடன் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளின் வங்கி வைப்பாளர்களையும் பாதுகாப்பது பாரிய பொறுப்பு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முறையின்படி வங்கி வைப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வங்கி முறைமை வீழ்ச்சியடையாது எனவும், இது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய மறுசீரமைப்பிற்கு வழி வகுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கடன் சுமையை அடுத்த 10 வருடங்களில் குறைத்து அதன் மூலம் கிடைக்கும் பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பிரான்சுக்கான கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பொதுநலவாய பொதுச் செயலாளர், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஜெனட் யெலன் உள்ளிட்டவர்களுடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மாற்றியமைக்க முடிந்ததையிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கூடுதல் பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: