உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் – நாடாளுமன்ற செயலாளர் நாயகம்!

Friday, March 5th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலான விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஏதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

மார்ச் 09 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் ஆரம்பமாகும் அதேவேளை, முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

அதனை அடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் பற்றியும் மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 மணி வரை விவாதம் நடாத்த பாராளுமன்ற அலுவல்கள்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் மார்ச் 09 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன அவர்கள் முன்வைக்கும் பெண்களின் உரிமை மீறல்கள் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த விவாதம் பிற்பகல் 3.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை இடம்பெறும்.

மார்ச் 10 ஆம் திகதி புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம்முறை இல்லை எனினும், முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் மார்ச் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறமாட்டாது என்றும் தெரவிக்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது - 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு, வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு என பொது சுகாதார பரிச...
நிதியினை விடுக்குமாறும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அரச அச்சக அ...