உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, June 15th, 20212021 கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சு நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடத்தும் தீர்மானம் தொடர்பில் நாளை 16 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், அழகியல் துறைசார் பணிப்பாளர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, 2020 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|