உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – வழமையான மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, January 23rd, 2023

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் இன்று (23) ஆரம்பமாகியது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 78 ஆயிரத்து 196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 55 ஆயிரத்து 513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றுகின்றனர்.

இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகின்றன.

அதன்படி, பரீட்சை நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக 317 ஒருங்கிணைப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை மையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக புகையிரத திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்படி, 1,617 சிசுசெரிய பேருந்துகளும் பரீட்சை நாட்களில் இயக்கப்படுகின்றன.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக இன்றுமுதல் 16 புதிய தொடருந்து சேவை நேரங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தொடருந்து சேவை துணை போக்குவரத்து கண்காணிப்பாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், பிரதேச மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பெண் நிலையங்கள் ஆகியவற்றில் ஆயிரத்து 625 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமான போதிலும், 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மாலை 4 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் மின்சார தடை அமுல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: