உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கட்டாய வருகை வீதத்தில் திருத்தம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Thursday, July 20th, 20232023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கட்டாய வருகை வீதத்தில் கல்வி அமைச்சு திருத்தம் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஆகக்குறைந்தது 40 வீதமான வருகையை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது கல்வித் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
“நெருக்கடிகள் காரணமாக பல மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பரீட்சை விண்ணப்பத்திற்கான வருகை விகிதத்தில் திருத்தம் செய்துள்ளோம்,” என்றார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கட்டாய வருகை வீதம் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கு மட்டுமே கட்டாய வருகை விகிதம் குறைந்தபட்சம் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 முதல் டிசம்பர் 21, 2023 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|