ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகளுக்கு நான்கு தடவைகள் அறிவித்திருந்தது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, December 8th, 2023

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகளுக்கு நான்கு தடவைகள் அறிவித்திருந்ததாக சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் சரியாகச் செயற்பட்டார்களா இல்லையா என்பது குறித்த தகவலின்படி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி கலங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் அவ்வாறானதொரு சம்பவம் எனவும்,

ஈஸ்டர் தாக்குதல் ஒரு பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்டதாகவும், சஹ்ரானை கையாளும் வெளிநாட்டு வலையமைப்பு தொடர்பில் புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாதவர்கள் தொடர்பில் இதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஆனால் இந்த பதிலில் திருப்தி இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் நாளில் பதிலளிப்பார் என சபைத் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: