தடைகள் வந்தாலும் சம்பூர் மின் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சியாம்பலப்பிட்டிய!

Wednesday, March 30th, 2016

எந்தத் தடைகள், சவால்கள் வந்தாலும் சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் அவற்றை வெற்றி கொண்டு அமைத்தே தீருவோம் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய  தெரிவித்தள்ளார்.

‘மின்தடை’ தொடர்பில் ஒருவருக்கொருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்காது எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட உறுதி பூணுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாட்டின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. எனவே மின் உற்பத்தி நிலையங்கள் மேலும் மேலும் தேவைப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டியது கட்டாயம். இதனால் சூழல் மாசடையும் என சூழலியலாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சூழல் பிரச்சினைகள் தலையெடுக்கும். எனவே இது தொடர்பான விடங்களை ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை இன்னும் இருவாரங்களில் கிடைக்கும்.

சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்க 2008 ஆம் ஆண்டே இந்தியாவுடன் உடன்படிக்கை செய்யப்பட்டுவிட்டது. சம்பூர் மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. எனவே இதைக் கைவிட முடியாது. எந்தத் தடைகள் சவால்கள் வந்தாலும் அனைத்தையும் வெற்றி கொள்வோம். சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்படும் – என்றார்.

Related posts: