இளைஞர் தலைமுறையை புதிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கு விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021

அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும் முன்வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வர்த்தக சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்தத் தயாராக உள்ளதாக, இலங்கை வர்த்தகச் சங்கம் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தின் ஊடாக மக்கள் முன் நாம் வைத்த நிகழ்ச்சித்திட்டங்களை, கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையினைத் தடையாகக் கொள்ளாமல் அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரைவான வேலைத்திட்டத்துக்கு பங்களிக்க தம்மால் முடியும் என்று இலங்கை வர்த்தகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை வர்த்தக சங்கம், தற்போது 560 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் தழுவிய வகையில் பிராந்திய வர்த்தக சபை குழுமம் வியாபித்துள்ளது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் மூலம் நாட்டை வேகமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, எமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளை சங்கத்தின் புதிய அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

அதேநேரம் வீதி வலையமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதன் நன்மைகள் குறுகிய காலத்தில் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைய ஒன்றினைச் செய்து – ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இலங்கை வர்த்தகச் சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மீள்பிறப்பாக்க வலுச்சக்தி, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை – வர்த்தக சபையின் தேசிய கொள்கைகள் குழுக்கள் விசேட கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அந்தவகையில் நடைமுறையில் உள்ள சில சட்ட திட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் அதைரியமடைந்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் – அத்தகைய தடைகளை நீக்குவதும், இலத்திரனியல் மயமாக்கல் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதன் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் – அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்பதனையைம் நான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: