இலாபமீட்டும் பேருந்து சாலையாக மாற்றும் பொறுப்பை வடக்கு மக்கள் நிறைவேற்றுவார்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை!

Friday, July 14th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 32 பேருந்துகளுக்கும் அவசியமான பணியாளர்களை வழங்கி, அதற்காக பெறப்பட்ட கடனை செலுத்தக் கூடிய வகையில் இலாபமீட்டும் பேருந்து சாலையாக மாற்றும் பொறுப்பை இப்பகுதி மக்கள் நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் வருகைதந்திருந்த அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாக ஏனைய பகுதிகளை விடவும் வட பகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை கொண்டு வந்தது.

இந்த கடன் மூலம் சகல பாதைகளும் புனரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.

அத்துடன், மின்சார விநியோகம், தொலைத்தொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல், கொவிட் பரவல், அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தற்போது வெளிநாட்டு கடனுக்கான தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி இல்லை.

ஜனாதிபதி, மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதிய நிபுணர்களுடன் இணைந்து இந்த கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாண தொடருந்து சேவை நாளைமுதல் மீள ஆரம்பிக்கப்படும்.

அதேநேரம் நல்லூர் ஆலய திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்களின் நலன்கருதி இரவு நேரங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக பதுளை ஓடிசி, சீத்தாவாக்கை ஓடிசி போன்று யாழ்ப்பாணம் ஓடிசி தொடருந்து சேவை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

Related posts: