இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து!

Thursday, July 11th, 2019

அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரொட்னி எம் பெரேரா அமெரிக்க ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் சந்தித்து நற்சான்று பத்திரங்களை கையளித்தவேளை இலங்கையுடனான உறவுகள் குறித்து தான் கொண்டுள்ள முக்கியத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரை வரவேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அமெரிக்கா இலங்கையுடன் தோளோடுதோள் நிற்கும் என்ற தனது அர்ப்பணிப்பை மீள வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையுடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும், கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரிவுபடுத்துவது குறித்த தனது அர்ப்பணிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவடைந்த பின்னர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நல்லிணக்கம் பொறுப்புக்கூறுதல், நீதி ஆகியவற்றை ஏற்படுத்துவது குறித்து இலங்கை வழங்கியுள்ள வாக்குறுதிகளையும் அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி இரு நாடுகளிடையிலான உறவுகள் ஜனநாயகம் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி ஆகியவை குறித்து பகிரப்பட்ட அர்ப்பணிப்புகள் அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: