மாவட்ட மூலக்கிளை தெரிவுகளில் நீண்டகால அங்கத்தவர்கள் புறக்கணிப்பு – தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கும் மும்முனை போட்டி – உடைகிறது தமிழரசுக் கட்சி!

Sunday, December 10th, 2023

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்த நிலையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மூவர் போட்டியிடுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றதா என்ற கேள்விக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட மூலக்கிளை தெரிவின்போது கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் மூலக்கிளைகள் மற்றும் தொகுதி, மாவட்டக்கிளைகள் புனரமைப்பு அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் மூலக்கிளை உள்ளிட்டவற்றின் புனரமைப்பின்போது, இலங்கை தமிழரசுக்கட்சியில் நீண்டகாலமாக செயற்படும் அங்கத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கரிசனை செலுத்திய இரா.சம்பந்தன்,

குறித்த மூலக்கிளை உள்ளிட்ட புனரமைப்பின்போது அங்கத்தவர்கள் தெரிவில் தாம் திருப்தி அடையவில்லை என்றும் அந்த தெரிவுகள் இதயசுத்தியுடன் நடைபெறாது தன்னை ஆதரிக்கும் கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசனத்தை வெளியிட்டுள்ளார்

அதுமட்டுமன்றி குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியின் ஒழுக்காற்றுக்குழு விசாரணைகளை நடத்தி உரிய தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டும் என்றும், தவறுகள் இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக உள்ள சீ.யோகேஸ்வரன், சம்பந்தனின் குறித்த முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்காலிக பொதுச் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தின் திகதி ஒதுக்கீட்டுடனான அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு கிளை மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை தொகுதி கிளை தெரிவுகள் சம்பந்தமாகவும் முறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கொழும்புக்கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் தலைமையில் நடைபெற்ற தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மூன்று உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதேபோன்று காங்கேசன்துறை தொகுதிக்கான அங்கத்தவர்கள் தெரிவில் குறைபாடுகள் உள்ளதாக கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். எனினும் அது தொடர்பில் இன்னமும் எழுத்துமூலமான முறைப்பாடு ஒழுக்காற்றுக்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: