இலங்கை – அவுஸ்திரேலியா இடையே நடைமுறை ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021

2021 ஜூலை 13ஆம் திகதி அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையேயான உறவை பல துறைகளில் பலப்படுத்துவதிலான பலன்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடியுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் மரைஸ் பெய்னுடன் நடைபெற்ற வெற்றிகரமான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, எதிர்கால கடல் அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காக இலங்கையின் கடல் பாதுகாப்பு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

அத்துடன் எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட கழிவுகளை சுத்திகரிப்பதற்காக, கடலோரத் தூய்மையாக்கல் முயற்சிகளுக்கு உதவும் முகமாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆதரவுகளை வழங்கியமைக்காக அமைச்சர் குணவர்தன இலங்கையின் நன்றியைத் தெரிவித்துள்ளார்..

கடல்சார் சுற்றுச்சூழல் அனர்த்தங்கள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் போன்ற சர்வதேச மற்றும் பிராந்திய அரங்குகள் மூலம் இத்தகைய சம்பவங்களின் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்த பரந்த அடிப்படையிலான உரையாடலை உருவாக்குவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேபோன்று இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்கு ஏற்ப இருதரப்புக் கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான முக்கிய தளங்களான அரசியல், பொருளாதார மற்றும் கடல்சார் துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

பரிமாற்றத்திற்கான சாத்தியமான துறையாக ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையின் மூலம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் அடையாளம் காணப்பட்டது.

அத்துடன் இலங்கையில் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் கல்வித் தகுதிகளைப் பெறக்கூடிய கல்வி மையமாக இலங்கையை கூட்டாக ஊக்குவிப்பதற்கான அவுஸ்திரேலியாவின் ஆர்வத்தை உயர் ஸ்தானிகர் ஹொலி உறுதிப்படுத்தினார்.

மேலும் இரு நாடுகளுக்குமிடையேயான கல்வி ஒத்துழைப்பையும், தற்போதுள்ள கோவிட்-19 தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக உயர்நிலைக் கற்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு மீளத் திரும்ப அனுமதிப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளையும் வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பிரயாணிப்பது குறித்து விரைவாக வசதிகளை வழங்குவதற்கு பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: