இலங்கையில் வீரியமடையும் கொரோனா தொற்று: நாளை தளர்த்தப்படுகின்றது ஊரடங்கச் சட்டம்!

Wednesday, April 15th, 2020

கொரோனா தொற்று பரவல் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அது நேரம் ஏனைய 19 மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை 16 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 04.00 மணிக்கு அமுல்படுத்தப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் அசௌகரியங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்து.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts: