இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்து!

Sunday, July 24th, 2022

கொவிட்-19 நோய் புதிய மாறுபாட்டுடன் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார அமைச்சு தனது முன்னைய தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த பட்சம் கொரோனா அபாயம் அதிகம் உள்ள பகுதிகளிலாவது கட்டாயம் முககவசத்தை அணிவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

உலகில் பல நாடுகள் கொவிட் 19 தொடர்பில் சாதகமான தீர்மானங்களை எடுத்து வருகின்ற போதிலும் இலங்கை இதுவரையில் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் தற்போது செயலிழந்துள்ள கொவிட் தொடர்பான தொழிநுட்ப குழுவை மீள அழைக்க வேண்டும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் முழுவதும் பி.ஏ.5 புதிய கொரோனா வைரஸ் பரவியதால் நோயாளிகளின் எண்ணிக்கை முப்பது சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

உலகில் வேகமாகப் பரவி வரும் புதிய மாறுபாடு இலங்கைக்கு வந்துள்ளதா என்பதை கண்டறிய இதுவரை எந்த வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் புதிய கொரோனா நோயாளிகள் இருக்கலாம் எனவும், எனவே அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இருந்த வளங்கள், மருந்துகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகள் தற்போது வைத்தியசாலை அமைப்பில் இல்லை என தெரிவித்த செயலாளர், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் ஆபத்தான நிலைமை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

இன்று பி.சி.ஆர் மேலும் ஆயிரம் ஆன்டிஜென் சோதனைகள் செய்யும்போது, ஐம்பது நோயாளிகள் பதிவாகி, மூன்று நாட்களுக்கு ஒரு நோயாளி இறக்கிறார் என்றார்.

சுகாதார அமைச்சில் எஞ்சியுள்ள கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக தெரிவித்த அலுத்கே, இந்த மாத இறுதியில் தடுப்பூசிகளை தூக்கி எறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை தடுப்பூசி கையிருப்புகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்க் கொண்டு, இலங்கைக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியுமா என உறுதியாக தெரியவில்லை என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நான்காவது டோஸைப் பெறாவிட்டால், பொது மக்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: