இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரியுங்கள் – ஜெனீவாவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழு கோரிக்கை!

Thursday, March 3rd, 2022

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சிய பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமை சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹம்மட் உடனான சந்திப்பின் போது,

இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், ஒற்றுமை, நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் விரிவான முயற்சிகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளை பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெட்ரிசியா ஸ்கொட்லாந்து உடனான சந்திப்பில், பொருளாதார முன்னணி, சுற்றுலா மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற வாய்ப்புக்கள் உட்பட பொதுநலவாய நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள்’ குறித்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

பொதுநலவாய செயலாளர் நாயகம் நீலப் பொருளாதாரத்தில் இலங்கையின் முக்கிய பங்கினை பாராட்டியதுடன் இந்த பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஈடுபாட்டைக் கோரியுள்ளார்.

இந்நிலையில் ஐ.நாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர கண்காணிப்பாளர் நசிமா பாக்லியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பின்போது –

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களுடனான இலங்கையின் நீண்ட கால நட்புறவு, இலங்கை சமூகத்தின் பல்லின மற்றும் பல மத இயல்புகள், அதன் முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் அவர்களது நலன்களை முன்னேற்றுவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேநேரம் உலக புலமை சொத்து அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டேரன் டாங்குடனும் ஆக்கபூர்வமான சந்திப்பில் ஈடுபட்ட அமைச்சர் பீரிஸ் கொள்கை அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல், புவியியல் குறியீடுகள், ஆராய்ச்சி, அபிவிருத்திக்கான ஐ.பீ.யைப் பலப்படுத்துவதில் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் புலமை சொத்துக்களில் தொழிநுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்த யோசனைகளை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்களில், நீதி அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அத்மிரல் ஜயநாத் கொலம்பகே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேம ஆகியோர் அமைச்சருடன்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தாக்கது.

000

Related posts: