இலங்கையின் முதலீடுசெய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் – ஜப்பான் பிரதித் தூதுவர் இலங்கை முதலீட்டுச் சபையுடன் சந்திப்பு!

Wednesday, March 22nd, 2023

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு, ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோவுடன் இணைந்து இலங்கை முதலீட்டுச் சபையுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இதன்போது, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இலங்கையில் உள்ள முக்கிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை முதலீட்டாளர்கள் மேற்கொண்டனர்.

இதன்போது, மருத்துவ உபகரண உற்பத்தி, மருந்துவம், பயணம் மற்றும் சுற்றுலாத் தொழில் குறிப்பாக கலாசார சுற்றுலா, ஹோட்டல் தொழில், சொத்து மேம்பாடு மற்றும் காணி விற்பனை போன்ற பலதரப்பட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை ஜப்பானிய முதலீட்டாளர்கள் வெளிப்படுத்தினர்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், “பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றங்களைச் செய்வதில் இலங்கை நீண்ட தூரம் வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும், வணிகம் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், அதன் மூலம் நாட்டிற்கு மிகவும் தேவையான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் என்றார்.

மேலும், முதலீட்டாளர்களை மேலும் எளிதாக்குவதற்கு முதலீட்டு சபைக்கு அதிகாரம் அளிக்கப்படும் வணிகத்தை எளிதாக்கும் விசேட முதலீட்டுக் கொள்கை குறித்தும் பிரதிநிதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்..

வட மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ள ஐந்து புதிய கைத்தொழில் மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் வலயங்களில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: