இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோரிக்கை!

Sunday, October 4th, 2020

மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோன தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆடை உற்பத்தி நிலையமொன்றின் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

39 வயதான குறித்த பெண் காய்ச்சலுடன் கம்பாஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது வெளியேற்றப்படவிருந்தார்.

எனினும் இன்று காலை வெளியான அவரது பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் உடனடியாக அவர் கொழும்பு தேசிய தோற்று நோயியில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவர் தொழில்புரிந்த தொழிற்சாலையும் மூடப்பட்டு, கிருமி நீக்க நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

அது மாத்திரமன்றி தொழிற்சாலையில் அவருடன் தொடர்புகளை பேணிய 40 பேரை அவர்களது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதேவேளை கம்பஹா, திவுலபிடிய தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புகளை பேணிய சுமார் 400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: