இலங்கைக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் – அமெரிக்காவின் உப ஜனாதிபதி!
Sunday, December 4th, 2016இலங்கையின் எதிர்கால அபிவிருத்திபணிகளுக்கு அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அமெரிக்காவின் உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைக் பென்ஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் அமெரிக்க உப ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைக் பென்ஸக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க புதிய நிர்வாகத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொள்ளும்படி திரு பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்ப்புக்கும், உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட திரு பென்ஸூக்கும் ஜனாதிபதி சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இலங்கையில் அண்மை காலமாக இடம்பெற்றுவரும் சமூக அரசியல் முன்னேற்றங்கள் குறித்து திரு பென்ஸ் இதன் போது பாராட்டு தெரிவித்தார். இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தமது நாடு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கையில் :
இரு நாடுகளின் ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் புவியியல் நிலை காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை பேணுதல் இரு நாடுகளினதும் குறிக்கோளாகும்.கடல் வழி பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பாக ஏற்படக்கூடிய எதிர்கால நிலைமைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தது.
அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பினை வழங்குமாறு ஜனாதிபதியினால்; வேண்டுகோள் விடுக்கப்பட்டதாவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
Related posts:
|
|