இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுநிலை – கன மழைக்கும் சாத்தியம் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது.

இது இன்று ( 03) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்கூறியுள்ளார்.

இதனால் இன்றுமுதல் எதிர்வரும் 08 ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளாார்.

வானிலை மாற்றம் தொடர்பில் அவர் வெளியிட்ட தகவலின் படி, “எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலைமைகளின் படி இதன் மிகச் சரியான நகர்வுப் பாதையை கணிக்க முடியாதுள்ளது. எனினும் சில மாதிரிகள் இந்த தாழமுக்கம் வடக்கு மாகாணத்தின் கரையோரத்தினை அணமித்தே நகரும் என காட்டுகின்றன.

அவ்வாறாயின் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் வேகமான காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளை விட சற்று கூடுதலான அளவு மழையைப் பெற வாய்ப்புள்ளது.

எனவே இன்றுமுதல் இலங்கையின் தென்கிழக்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியமாகும்.

விவசாயிகள் குறிப்பாக வெங்காயம் மற்றும் சிறுதானிய செய்கையாளர்கள் எதிர்வரும் 08 ஆம் வரை அறுவடை மற்றும் விதைத்தல் செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: