இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கும் கடன் சுமைகளில் இருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. 

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கை ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ள போதிலும் சீனா இன்னமும் உதவவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கையால் சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனுதவியை பெற முடியவில்லை, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கும் சீனா பதிலளிக்கவில்லை என பேட்டியொன்றில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதியின் இந்த கருத்து குறித்து பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் சீனா தனது பாராம்பரிய நட்பு மற்றும் அயல்நாடான இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அனுதாபத்துடன் அவதானித்து வருகின்றது, என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு சீனா தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவிகளை சீனா வழங்கும், முதல் தொகுதி மருந்துகள் ஏற்கனவே இலங்கை சென்றடைந்துவிட்டன, முதல் தொகுதி அரிசியுடன் கப்பல் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதுஎன தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அனைத்து தரப்பு மக்களிற்கும் உதவுவதற்காக பல தொகுதிகள் மற்றும் பல தரப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கு சீனா தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: