இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி –யாழ்ப்பாணத்தில் அதிசயம்!

Saturday, June 9th, 2018

சுகயினம் காரணமாக உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இரண்டு வயது சிறுமி ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 15ம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று சிறுமிக்கு இறுதி கிரியைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், சிறுமியின் உடலில் இருந்து திடீரென சிறுநீர் மற்றும் மலம் என்பன வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கொண்டு சென்ற நிலையில், உறவினர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், குறித்த குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்து மீண்டும் இன்று இறுதி கிரியைகள் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், குழந்தையின் நாடித்துடிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி கிரியைகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுமியின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறியுள்ளதுடன், சளி மற்றும் வியர்வையும் வெளியேறியுள்ளது.

எவ்வாறாயினும், சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்று நாட்களை கடந்துள்ள போதிலும், உயிரிழந்தவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் எந்த மாற்றமும் சிறுமிக்கு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி உயிருடன் இருப்பதாக முழுமையாக நம்பும் உறவினர்கள், சிறுமி விரைவில் நலம்பெற வேண்டும் என இறை பிரார்த்தனையில், ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: