“இருள் அகன்று முழு நாடும் ஒளி மயம்” மின்சார திட்டத்தில் தீவக பகுதிகளின் அபிவிருத்தி முதன்மையுற வேண்டும் ஈ.பி.டி.பி. கோரிக்கை
Friday, May 13th, 2016தென்பகுதியைப்போல வடபகுதியையும் பாரபட்சமற்ற வகையில் கட்டியெழுப்பும் ஒரு கட்டமாக மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் வரும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய புதிய திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக மின்சக்தி சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று காலை (13) யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ள மின்சார நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற “இருள் அகன்று முழு நாடும் ஒளி மயம்” நிகழ்வு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குடாநாட்டின் மின்சார நிலைமைகள் தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் மற்றும் குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் துறைசார் வல்லுநர்கள் அழைக்கப்பட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கலந்துகொண்டு கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்திருந்தார்.
நெடுந்தீவு பகுதி மின்சாரசபைக்கு நிரந்த இடம் இல்லாத காரணத்தினால் மின் பிறப்பாக்கிகளை பாதுகாப்பற்ற முறையில் வெளியில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. இதற்கான ஒரு நிரந்தர இடத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த பகுதிக்கு தெரு விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
தீவுப் பகுதிகளில் மின்சார சபைக்கு காரியாலயங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு நெடுந்தீவு பகுதியில் (RO Plan) உவர் நீரை நன்னீராக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால். இத்திட்டத்திற்கு கூடுதலான மின்சாரம் தேவைப்படுகின்றது. வறிய மக்களைக்கொண்ட இப்பகுதிக்கு நன்நீரை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை முற்று முழுதாக நீக்கி இப்பகுதி மக்களுக்கு இலவசமாக நீரை விநியோகிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்ததுடன் யாழ் குடாநாட்டில் தற்போது அதிகளவில் களவு, கொலை, கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்கள் இடம் பெறுவதால் அதனை தடுக்கும் பொருட்டும் குடாநாட்டின் பாதுகாப்பின் நிமித்தமும் பிரதான வீதிகள் மற்றும் கிராம மட்டங்களில் தெரு விளக்குகள் போடப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா வடக்கையும் தெற்குப் போல் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம் எனவும் வறியவர்கள் மற்றும் மின்சார இணைப்பை செய்வதற்கு வசதி இல்லாதவர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக எமது மின்சார சபை ஊழியர்களை அனுப்பி மின்சார இணைப்பை மேற்கொண்டு கொடுப்போம்.
அத்துடன் கடனடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான பணத்தை இணைப்பை பெற்றுக்கொண்டவர்கள் பின்பு பணம் கட்டக் கூடியவாறு எமது புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதியில் உள்ள மின்சாரக் கம்பத்திலிருந்து வீடுவரை மின் வயரை கொண்டு சென்று வீட்டிற்கு மின் இணைப்பு வேலைகள் அனைத்தையும் செய்து மின்சாரத்தினை வழங்குவோம். அதற்கான பணத்தினை செலுத்த ஆறு வருடங்கள் அதாவது 72 மாதங்களை வழங்குகிறோம். மாதம் 680 ரூபாய் செலுத்த வேண்டும். இது ஒரு மிகக் குறைந்த தொகை. இந்த அதிஸ்டத்தை தவறவிடாமல் மின்சார சபைக்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
Related posts:
|
|