இரும்புகளை விற்பனை செய்வதற்கு சர்வதேச ரீதியில் விலை மனுக் கோரல் – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023

புகையிரத திணைக்களத்தின் வசம் உள்ள பயன்படுத்தப்படாத பல பழைய இயந்திர கருவிகள் மற்றும் இரும்புகளை விற்பனை செய்வதற்கு சர்வதேச ரீதியில் விலை மனுக் கோரலை அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்னைய முறையின் ஊடாக சில உள்ளுர் நிறுவனங்களே மிகக் குறைந்த விலையில் இந்த இரும்பைப் பகிர்ந்தளிப்பதாகவும், எனவே இதனைத் தடுக்கும் வகையில் எதிர்காலத்தில் இந்தப் புதிய முறை பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட புகையிரத பெட்டிகள் தொடர்பில் சில தரப்பினர் கூறுகின்ற கருத்துக்கள் உண்மையல்ல எனவும், அவற்றின் துல்லியத்தன்மையை கண்டறிந்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கையை தயாரிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: