இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும் – மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021

மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை 15 ஆம் திகதிமுதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்பொழுது மன்னாரில் உள்ள காலநிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாக காணப்படுகின்றது. மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது. சுகாதார நடை முறைகளை கடை பிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமைமுதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான பரிசோதனை நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுப்பார்கள்.

அத்துடன் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்களும் இது வரை மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 685 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதால், நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி, அதிகளவான கொரோனா நோயாளிகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

176 மொத்த சிகிச்சை மையங்களில் 30 சதவீதம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இது எச்சரிக்கை மணியை ஒலிக்க வைக்கிறதென்றும் நிலைமை என்றும் மோசமடைவதற்கு முன்பு  அதைக் கட்டுப்படுத்துவது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு இல்லையெனில், சில மாதங்களுக்கு முன்பு இருந்த இருண்ட காலகட்டத்திற்கு நாடு செல்லுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாடு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையை அடைய வேண்டுமானால், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: