சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Wednesday, March 13th, 2019

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதி மக்களுக்கான வறட்சி கால குடிநீர் விநியோகம் அடுத்தமாதம்முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

வருடாவருடம் தீவக பகுதியில் காணப்படும் வறட்சியான காலநிலையால் மக்கள் குடிநீரைப் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவது வழமை.

இந்நிலையில் குறித்த பகுதி மக்கள் தமது பகுதிக்கு வறட்சி கால குடிநீர் வசதியை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பகுதி மக்களது தேவைப்பாடுகளை கருத்தில் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக குறித்த செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் சித்திரை மாதம்முதல் முதற்கட்டமா குறித்த பகுதிக்கு வறட்சி கால குடிநீர் வசதியை பவுசர்கள் மூலம் கொண்டு சென்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: