இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 18th, 2021

அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (19) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளையதினம் (19) ஆரம்பமாகவுள்ளன.

இதேநேரம் தொழில்நுட்ப பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அறிவியல் மொழி மற்றும் புவியியல் பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் முகாமைத்துவ பீடத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த பீடங்களின் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்தினம் விடுதிகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: