இன்று மின்வெட்டு இல்லை – எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022

இன்று மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் கிடைத்தன் காரணமாக இன்று அதிகாலை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

எனினும், கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல அனல் மின் நிலையங்களில் எரிபொருள் இருப்பு குறைந்ததால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மின்வெட்டுக்குச் செல்ல பொது பயன்பாட்டு ஆணையம் நேற்று தீர்மானித்திருந்தது.

அதன்படி, நேற்று மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஏ, பி, சி, டி என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது.

அதேநேரம் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான காலகட்டத்தில் நான்கு மண்டலங்களிலும் தலா 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எரிபொருள் பற்றாக்குறையினால் செயலிழந்திருந்த சபுகஸ்கந்த ஏ மற்றும் பி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நேற்றிரவு எரிபொருள் கிடைத்ததால் இன்று காலை 100 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பிற்கு சேர்க்க முடிந்தது.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 350 மெகாவாட் மின் இழப்பு ஏற்பட்டது.

எவ்வாறாயினும், மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இலங்கை மின்சார சபைக்கு தற்போது கிடைக்கப்பெறுவதால் இன்று மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: