இன்றும் நீண்ட நேரம் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, February 28th, 2022

நாட்டில் இன்றையதினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்று  மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்கள், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

இந்த வலயங்களில் காலை 8.30 முதல்,  மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள், மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நீர் மின் உற்பத்தி பிரதேசங்களில் காணப்படும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அந்தப் பகுதிகளில் தற்போது உள்ள நீர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கே மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானதாக உள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. அதற்கிணங்க மீண்டும் மழை வீழ்ச்சி ஏற்பட்டு மேற்படி நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மட்டம் அதிகரிக்கும் வரை தொடர்ச்சியாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும்.

மேற்படி பகுதிகளில் தற்போது எதிர்பார்க்கும் மழை வீழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: