இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 25 பேர் பலி!
Wednesday, December 7th, 2016
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமத்ரா தீவுகளின் ஆசே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அடுத்தடுத்து, ஐந்துமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி, கடைகள், மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் போனது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெறுகிறது.
2004-ஆம் ஆண்டு டிசம்பரில் இதே சமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 12 நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை பலி கொண்டது சுனாமி பேரலை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|