இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – பிரதமர் தினேஸ் குணவர்தன சந்திப்பு – அபிவிருத்தியின் அனைத்து துறைகளிலும் இந்தியா – இலங்கை – இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் உறுதியளிப்பு!

Saturday, September 24th, 2022

இலங்கைக்கு பொருத்தமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா ஆதரவு அளித்தமைக்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் பிரதமர் தினேஸ் குணவர்தன சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன் போதே அவர் மேற்டகண்டவாறு தெரிவித்துள்ளார் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த சந்திப்பின் போது, இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி, நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா, இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், புகையிரதங்களின் கூட்டுத் திட்டங்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகள் உட்பட எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் இதன்போது விவாதித்தனர்.

அபிவிருத்தியின் அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திறன்களில் பிரதமரின் வழிகாட்டுதலுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: