தேர்தல் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே அமைப்பு தெரிவிப்பு!

Friday, July 24th, 2020

தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் பணிப்பாளர் அகமட் மனாப் தெரிவித்துள்ளார்.

கஃபே அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் – ”தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் என்ற நோக்கில் கிராமத்திற்கு கிராமம் என்ற வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

அந்தவகையில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் ‘கஃபே அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஒரே கட்சியில் போட்டியிடும் அபேட்சகர்களிற்கு எதிராக வெறுப்பூட்டத்தக்கதான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதுடன். பொய்யான பிரச்சாரங்களும் அதிகளவில் பரப்பப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருக்கின்றது.

வன்முறைகள் அதிகரித்த சில பகுதிகளை பொலிஸ் திணைக்களத்திற்கு அடையாளப் படுத்தியுள்ளோம். வன்னி மாவட்டத்தில் வவுனியா தொகுதியில் முறைப்பாடுகள் மிகவும் குறைவான நிலையில் காணப்படுகின்றமை பாராட்டத்தக்க விடயமாக இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் போன்ற முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளது.

குறிப்பாக பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது பிரதேசங்கள் வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் பகுதியாக எம்மால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன். காத்தான்குடி, ஏறாவூர், கிண்ணியா, புல்மோட்டை மற்றும் வடக்கில் யாழ் மாவட்டம் போன்ற பகுதிகள் வன்முறைகள் தொடர்பாக முன்னிலையான இடத்தை பெறுகின்றது. வட கிழக்கிற்கு அப்பால் குருநாகல், மதுகம, தங்கல்ல போன்ற பகுதிகளை நாம் அடையாளப்படுத்தியுள்ளோம்.

இந்த சந்தர்ப்பத்தில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ள அவர் – வாக்களிப்பு தினத்தில் அதன் விகிதாசாரம் அதிகரிக்குமா என்பது சவாலான விடயம்என்பதுடன் இம்முறை தபால் மூல வாக்களிப்பும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்திருக்கின்றது. எனவே வாக்களிப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு பல நிகழ்சித்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டம் இயற்றும்  நாடாளுமன்றம் இல்லாமல் இந்த நாட்டிலே மக்கள் பயணிக்க முடியாது. எனவே தான் அதிமான நிதியை செலவளித்து வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இந்த தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடாத்துகின்றது.  எனவே சவாலுக்கு மத்தியில் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாட்டு மக்கள் இருக்கின்றார்கள்” என தெரிவித்தார்.

Related posts: