சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை அனைத்து மாகாணங்களிலும் ஒளிப்பதிவு செய்யும் அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 14th, 2021

பல்வேறு வகையில் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் சம்பவத்துக்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும்.

எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதால், குறித்த சாட்சிகள், ஒளிப்பதிவு செய்து பெற்றுக்கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சாட்சியங்கள் விசேட ஏற்பாடு சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் காணொளிப் பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக, நாடளாவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கியதாக மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை நிறுவுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: