இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதி அமைச்சு ஏற்பாடு – நிதியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, February 24th, 2022

இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு தயாராகி வருகிறது.

இந்திய அரசின் தலையீட்டுடன் இந்தியன் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று வியாழக்கிழமை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான உடன்படிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கைச்சாத்திடப்படவுள்ளது

இது தொடர்பான அனைத்து உடன்படிக்கைகளும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, விரைவில் இந்தியா அல்லது இலங்கையில் குறித்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடியை போக்குவதற்கு தமது நாடு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு இந்திய அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நாளை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: