இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தது நைட்ரஜன் யூரியா திரவ பசளை தொகுதி – விமான நிலையத்தில் துறைசார் அமைச்சர்கள் நேரில் சென்று பொறுப்பேற்பு!

Wednesday, October 20th, 2021

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரத்தின் முதல் தொகை இன்று அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தப் பசளை ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL – 1156 என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 12. 25க்கு, கொண்டுவரப்பட்டது.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ஷ, டீ.வீ.ஷாணக்க உள்ளிட்ட தரப்பினர், குறித்த பசளைத் தொகையை, கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றனர்.

பெரும்போக நெற் செய்கை, ஏனைய பயிர்ச் செய்கைகள், மரக்கறிகள் மற்றும் பழப் பயிர்ச் செய்கைக்குத் தேவையானதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்றதுமான இந்தத் திரவப் பசளையை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பெரும்போக நெற் செய்கையை ஆரம்பித்துள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி, கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவிததுள்ளார்.

உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற உயர் ரக பசளை வகையான குறித்த திரவப் பசளையானது, பயிருக்குத் தேவையான நைட்ரஜன் போஷாக்கைத் திறம்படப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு இந்தியாவின் IFFCO நிறுவனத்தினால், நெனோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரவப் பசளையில் காணப்படும் நைட்ரஜன் கூறு, நேரடியாகத் தாவர இலைகளால் உறிஞ்சப்படுகிறது என, கமநலத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ்.எச்.எஸ். அஜந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 31 இலட்சம் லீற்றர் திரவ நைட்ரஜன் பசளையில் 5 இலட்சம் லீற்றர், இவ்வாரத்தில் இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த வாரத்தினுள் மாத்திரம் 5 இலட்சம் லீட்டர் நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரத்தை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றாடலுக்கு இணைவான விவசாயம் எனும் ஜனாதிபதியின் கருத்திட்டத்திற்கு ஏதுவாக பெரும்போக செய்கையில் சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: