ஆறு மாதங்களின் பின்னர் கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவை இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Saturday, July 15th, 2023

கொழும்புக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான புகையிரத மார்க்க போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்றுமுன்தினம் (13) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது. இதையடுத்து, கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை இன்று மீள செயற்பட ஆரம்பித்துள்ளது.

முன்பதாக அநுராதபுரம்முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.

மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில், இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய மார்க்கத்தின் ஊடாக தொடருந்துகள் மணித்தியாலததிற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என்ற போதிலும், முதலில் சில நாட்களுக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையில் 45 நிமிடங்களிலும், கொழும்பு கோட்டையில் இருந்து ஓமந்தைக்கு 5 மணித்தியாலயங்களிலும் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய உதவி திட்டத்தின் கீழ் தொடருந்து வழித்தட புனரமைப்பு பணிகளுக்காக, கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல், கொழும்பு யாழ்ப்பாணம் தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.

முதலாம் கட்டமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடர்ந்து வழித்தட சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் முன்னதாக நாளாந்தம் 5 தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை 3 சேவைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண தொடருந்து நிலைய அத்தியட்சகர் ரி. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கல்கிஸையிலிருந்து அதிகாலை 5.10 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் சேவையும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 க்கு புறப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் இந்தச் சேவைகளை, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: