ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் நாட்டின் பொருளாதாரம் – நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் – விஷேட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024

பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது, நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி –

புத்தகம், மருந்து பொருள்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் வற் வரி பட்டியலில் இருந்து நீக்கப்படும். அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும்.

அத்துடன்,  இந்த வருடத்தில் 2 சதவீதம் முதல் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள். நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லை என்றும் நாட்டுக்காகவே செயற்படுகிறேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்..

மேலும் அழகிய வார்த்தைகள், வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது. கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியும்.

நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், அதனை மக்களிடம் காட்டவில்லை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். மக்கள் மீது தேவையில்லாமல் வரி விதிப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணங்கள் தேவைக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மக்களின் வரிப்பணத்தை பூ பறிப்பது போல் வசூலிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால் அந்த நடைமுறையை நாங்கள் பின்பற்றவில்லை என்று விமர்சிக்கிறோம். ஆனால் அந்த விமர்சகர்கள் மறந்து விடுவது ஒன்று உண்டு.

பூக்களை பறித்து ரோன் எடுக்கும் நேரங்களும் உண்டு. இது நமக்கு அருமையான பாடம். சாதாரண நிலையில், பூக்களை நசுக்காமல் ரோன் பெற முடியும், ஆனால் நீங்கள் நடுவில் செல்லும்போது அவ்வாறு செய்ய முடியாது. அங்கு நிலைமை வேறு. இன்று நாம் நடுப்பகுதிக்குச் செல்கிறோம். என்றார்.

மேலும் 46 வருடங்களின் பின் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பர் மாதத்தில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வட்டி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மந்தமாக இருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: