அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தயார் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, September 25th, 2023

அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் 1999 இல் முதல் முறையாக மலேசியாவில் பரவியது. இந்தநிலையில், அண்மையில் இந்தியா – கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, நிபா வைரஸ் காரணமாக இதுவரையில் கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இணங்காணப்பட்டவர்களின் ஆயிரத்து 233 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில், 352 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாவதற்கான சாத்தியம் உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில் எதிர்காலத்தில் இலங்கையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன், நிபா வைரஸ் தொடர்பாக இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன், இன்று அமைச்சரவை கூட்டத்தின் போது அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: