அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்களுக்குப் பணித் தடை  – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

Saturday, January 14th, 2017

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரின் அலுவலகம் முன்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில ஆசிரியர்களுககுப் பணித்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணித்தடை உத்தரவு வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டத்தில் தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாகத் தமது சொந்த வலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி மறியலில் ஈடுபட்டிருந்தனர். கல்வி அமைச்சின் செயலாளரை ஆசிரியர்கள் வெளியேற விடாது தடுத்தனர். இதன்போது ஆசிரியர்கள் வாகனத்தில் தட்டுப்பட்டதாக செயலாளரின் சாரதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது செயலாளர் மதில் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார். அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் இதனை உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாகப் பின்னர் அறிந்தோம். ஆனால் தாம் காயமடைந்த நிலையில் செயலாளர் தன்னைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் சில ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு சில வலயக் கல்விப் பணிமனைக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஊழியர்கள் தாம் பாதிக்கப்படும் போது தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக ரீதியான உரிமையாகும். இது தொடர்பாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அதிகாரிகளை மதிக்காமைத்தாபன விதிக்கோவையில் குறிப்பிட்டுள்ள முறைமைக்கு அமைவாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பணிப்பாளர் குறிப்பிட்டார். ஆயினும், நாம் ஸ்தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பு எனவும், அதில் ஜனநாயக நாட்டில் பேசும் சுதந்திரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் இது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்திருக்கின்றோம்.

இவ்வாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவு உடனடியாக இரத்துச் செயப்பட்டு இலங்கை அரசியல் யாப்புக்கமைய அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இல்லையேல் போராட்டம் மேற்கொள்வோம் என்றுள்ளது.

ceylonteachersunion

Related posts: