புதுவருடத்தை முன்னிட்டு சேவையில் 28,000 பஸ்கள் !

Tuesday, April 11th, 2017

புதுவருடத்தை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி மேலதிகமாக 28,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

இதேவேளை, விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில் மேலதிகக் கட்டணம் அறவிடப்படுகின்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, பஸ்களில் ஏறியவுடனேயே போக்குவரத்து பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர வலியுறுத்தினார்.

மேலதிகமாகக் கட்டணம் அறவிடப்படுமாயின் உடனடியாக பஸ் தரிப்பிடத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர் கூறினார்.மேலும், இடைநடுவில் அதிகக் கட்டணம் அறவிடப்படுமாயின் போக்குவரத்து பற்றுச்சீட்டுடன் எழுத்து மூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முறைகேடுகள் குறித்து 1955 என்ற துரித சேவைக்கு அறிவிக்குமாறும் பயணிகளிடம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: