அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் – நடைமுறைப்படுத்தியது பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Thursday, January 11th, 2024

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதற்கமைய அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணிமுதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களை விட்டு வெளியேறாமல் பணியை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கைக்கமைய, அரசு அலுவலகங்கள் பிற்பகல் 3.00 மணி வரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பணியின் போது தனது அலுவலக அடையாள அட்டையை அணிந்துகொள்வதுடன், சீருடை உதவித்தொகை பெறும் அனைத்து அரசு அலுவலர்களும் சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமையன்று அமைச்சின் கீழ்மட்ட அதிகாரிமுதல் அமைச்சின் செயலாளர்வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் தங்கியிருப்பது மிகவும் அவசியமானது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நிறுவனத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து அரச நிறுவனங்களின் விசாரணை கவுண்டர்கள், பணம் ஏற்றுக்கொள்ளும் கவுண்டர்கள், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கவுண்டர்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும்.

கடமையின் போது மற்ற தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கவீனமுற்ற வாடிக்கையாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை `ஒரு சில அரச ஊழியர்கள்  தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும்  கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே~ குறித்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: