அமைச்சு – இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கு புள்ளிவழங்கும் முறைமை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Sunday, April 30th, 2023

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களினது செயல்திறனின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து காலாண்டுக்கு ஒருமுறை மாற்றங்களைச் செய்யும் நோக்கத்துடன் அவர்களுக்கு புள்ளிவழங்கும் முறைமையொன்றை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செயலாளர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றத்தை அடைவது மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்படும் மற்றொரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இடமாற்றம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், செயலர்கள் செயலாற்றத் தவறிய பகுதிகளும் அவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான புள்ளிகளை வழங்குவதில் கவனத்தில் கொள்ளப்படும்.

அந்தந்த அமைச்சர் மற்றும் பிற அமைச்சுகளுடன் ஒருங்கிணைக்கும் திறன், மற்றைய அதிகாரிகளுடன் முரண்படும் பிரச்சினைகள் என்பனவும் மதிப்பீட்டுச் செயல்பாட்டில் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், 65க்கு மேல் அதிக புள்ளிகளை பெற்றவர்கள் அதே அமைச்சில் தக்கவைக்கப்படுவார்கள் என்றும் 50 முதல் 65 வரை உள்ளவர்கள் இடமாற்றத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எவ்வாறாயினும், 50 புள்ளிகளின் கீழ் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் அமைச்சின் செயலாளர் பதவியையும் இழக்க நேரிடலாம். ஒப்பந்த அடிப்படையில் இருப்பவர்கள் அவர்களது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுக்களின் செயலாளர்களாக பணியாற்றுவதற்கு அதிகாரிகளை தெரிவு செய்யும்போது இந்த புள்ளி முறைமை கவனத்தில் கொள்ளப்படும்.

அதிகாரிகள் மீதான தொடர் நடவடிக்கைகளுக்காக, காலாண்டு அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மக்களுக்கு சிறந்த மற்றும் திறமையான சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: