அமைச்சர் நாமல் தலைமையில் ‘கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி’ உருவாக்கம் !

Saturday, April 10th, 2021

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கும், மக்களின் தேவைகளை சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைமுறைப் படுத்துவதற்கும், மீள பரீட்சிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார்.

‘கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி’ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, சீத்தா அரம்பேபொல, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநேசத்துரை சந்திரகாந்தன், காதர் மஸ்தான், கபில அத்துகோரல, சஞ்சீவ எதிரிமான்ன, நிபுன ரணவக்க, சாமர சம்பத் தசநாயக்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, சிந்தக்க அமல் மாயாதுன்னே மற்றும் ஜயந்த வீரசிங்க உள்ளிடட 15 நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றுமு; அதனுடன் தொடர்புடைய மற்றும் அவசியமான அனைத்து தகவல்களையும் வழங்கி தொடர்பாடல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் உட்பட பிரதேச ரீதியாக அனைத்து அதிகாரிகளையும் சேவை முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வைக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைகள், பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட தேசிய மட்டத்திலான அரசாங்க நிறுவனங்களின் மூலம் 2021 முதல் 2023 பாதீட்டுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது இந்த செயலணியின் பொறுப்பாகும்.

இதற்கமைய, வீதிகள், குடிநீர் வழங்கல், மின்சாரம், தொலைபேசி தொடர்பாடல், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், நகர்புற பல்கலைக்கழகங்கள், காணி வழங்குதல், வங்கிகள் மற்றும் நிதி வசதிகள், சந்தைகள், களஞ்சியசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவது இந்த செயலணியின் பொறுப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் எந்தவொரு அரச சேவையாளரும் அல்லது அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்களின் அதிகாரி ஒருவர் செயலணி பொறுப்பளிக்கும் கடமையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தல் அல்லது தவறவிடும் சந்தர்ப்பங்களை தமக்கு அறிவிக்குமாறு செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: