அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரி ஒருவரை நியமியுங்கள் – பிரதானிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

Saturday, September 4th, 2021

அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரியொருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

நியமிக்கப்படும் குறித்த அதிகாரியினூடாக நிறுவன ரீதியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை கண்காணித்து, மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரியுடன் தொடர்புகளை பேணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா தொற்று சமூகத்தில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது

இதேவேளை

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 26 இலட்சத்து 60 ஆயிரத்து  231 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 90 இலட்சத்து 7 ஆயிரத்து 588 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதில் கொவில்சீல்ட் இன் இரண்டாவது தடுப்பூசியை 8 இலட்சத்து 86 ஆயிரத்து 644 பேரும், சினோபார்ம் இரண்டாவது தடுப்பூசியை 72 இலட்சத்து ஆயிரத்து 537 பேரும் பெற்றுள்ளனர்.

அத்துடன் ஸ்புட்னிக் பி இன் இரண்டாவது தடுப்பூசியை 33 ஆயிரத்து 231 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பைசர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம் அமெரிக்க தயாரிப்பிலான மொடேர்ன் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை 6 இலட்சத்து 69 ஆயிரத்து 162 பேர் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், குறித்த போலி விண்ணப்பப் பத்திரமானது சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினாலோ வெளியிடப்படவில்லை.

எனவே இணையத்தளத்தில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரத்தை நிரப்ப வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: