அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்க திட்டம் – வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவிப்பு!
Monday, July 17th, 2023அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தனியார் மற்றும் அரச துறையின் கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபா செலவில் இந்த நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அஞ்சல் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அஞ்சல் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களில் குறித்த துறையில் இலாபமீட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த வருட இறுதிக்குள் 3000 மில்லியன் ரூபாவால் நட்டத்தைக் குறைக்கவும், 2025 ஆம் ஆண்டளவில் இலாபம் ஈட்டும் நிறுவனமாக அஞ்சல் திணைக்களத்தை மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள அஞ்சல் கட்டளைச் சட்டம், அதனை நவீனமயமாக்கும் செயற்பாட்டுக்கு இடையூறாக இருப்பதால், அதனை அவசரமாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் ஏற்கனவே 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|